Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நாட்டில் பாதிப்பு அதிகம் உள்ள, சென்னை உள்ளிட்ட 38 மாவட்டங்களில் வீடு, வீடாக ஆய்வு: மத்திய அரசு உத்தரவு

ஜுன் 09, 2020 06:44

புதுடெல்லி : கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் காணப்படும் 10 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தவும் முறையான பரிசோதனையை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

மஹாராஷ்டிரா, தமிழகம், ராஜஸ்தான், ஹரியானா, குஜராத், மத்திய பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 38 மாவட்டங்களில் தான் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளது. அதிலும் இந்த 38 மாவட்டங்களில் உள்ள 45 மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் மட்டுமே பாதிப்பு அதிகம் உள்ளது.

இங்கு வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து இந்த மாவட்டங்களின் கலெக்டர், மாநகராட்சி அதிகாரிகள், எஸ்.பி., மருத்துவ கல்லுாரி முதல்வர்களுடன் மத்திய சுகாதாரத் துறை செயலர் ப்ரீத்தி சுதன் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக நேற்று ஆலோசனை நடத்தினர்.

இதன்பின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: நாடு முழுதும் பெரும்பாலான பகுதிகளில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதால் வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட வாரியாக தீவிரப்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள 38 மாவட்டங்ளில் வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தும்படியும் முறையான பரிசோதனை மற்றும் கண்காணிப்பு பணிகளை தீவிரப் படுத்தும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில் முதியோர் மற்றும் ஏற்கனவே வேறு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிப்பதில் முன்னுரிமை அளிக்க வேண்டும்.முறையான பரிசோதனை நடத்தி வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்தி அவர்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். இதன் வாயிலாக அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முடியும்.

மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதியை உறுதி செய்வது கண்காணிப்பு பணியில் அதிகமானோரை ஈடுபடுத்துவது உள்ளிட்ட போதிய சுகாதார கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும்படியும் இந்த மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தலைப்புச்செய்திகள்